Friday, 26 March 2010

அழகிய நோய்

ஒரு பாலிடம் தொடங்கி,
மறு பால் தொற்றும்
இது ஒரு நோய்?

முதல் ஈர்ப்பு எப்படி
என்றறியா, தெரியா கணத்தில்
நம்மையறியாது தொற்றும்

நீ  செய்த ஒரு நன்மை,
அல்லது உன் பிடிவாதம்
என ஆயிரம் காரணம்

காரணத்தில் நல்லவை
அல்லது கெட்டவை
என்று பிரிவில்லை இதற்கு.
தேவை  வெறும் காரணமே.

நீ செய்யும் ஒவ்வொன்றையும்
நின்று ரசிப்பது
இதனொரு பக்க விளைவு

நீ கனவில் வருவதும்
அன்றாடக் கடமைகளில்
குறைபாடு நிகழ்வதும்
அறிகுறி என்கின்றனர்.

அன்பு பரப்பும் இது
தீது விலக்கும்
கலை வளர்க்கும்
அழகுற வைக்கும்...

தீர்வொன்று தேவையே இல்லாமலிருக்கும்
இந்தக் "காதல்" ஒரு
அழகிய நோய்தான்.



Thursday, 25 March 2010

தலைக்கு மேல் வந்த வினை

அது ஒரு இதமான இரவு வேளையின் பின் பகுதி. விடியறதுக்கு ஒரு 3 மணி நேரமே இருந்தது. அப்போ மணி 2.30 இருந்திருக்கணும். சுத்தி வர சிட்டுவேஷன் எப்பிடி இருக்குன்னு அறவே தெரியாத லெவல்ல, இன்னும் தொடர்ந்து ஒரு 5 நிமிஷம் குறட்டை விட்டிருந்தேன்னா பக்கத்து வீட்டுக்காரன் என் பெட்ரூம் சுவர்ல தட்டி "யோவ் அந்த மாவு அரைக்கற மிஷினை அர்த்த ராத்ரில ஆன் பண்ணி அப்டி என்னய்யா சரித்திரம் படைக்கறே, அதை அணைச்சுத் தொலையும்" என்று கத்தும் நிலைமைல தூங்கிக்கிட்டு இருந்தேன். 

அப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. "இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. "ஆகா சேம் பிளாட்" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு. 

"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.
 "நண்பா! நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.   

அடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். "ராகவா... ராகவா..." டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். "என்ன மச்சான் இந்த நேரத்துல?". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. "அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினிட்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்".  "ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா". "ஷ்யூர் டா" நேரம் மணி 3.


நான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். "ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்". "ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல". "டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்". "ஓகே"

பேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. "இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்?" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.
வேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன். 


வழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.

"இன்னாடா நடக்குது இங்க?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.


அவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து "விடுகதையா இந்த வாழ்க்கை..." என்று பாடுவது போலவே தோன்றிட்டு...



Wednesday, 24 March 2010

இது மற்றுமொரு முத்தமில்லை

என் உதடுகள் இன்னும் காய்ந்து விடவில்லை. அவை காய்வதில் எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. உன் இதழ் ரேகைகள் உருவாக்கிய குளிர்ச்சி என்னை சிலிர்க்க வைத்தது.

அது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.



நீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.


 உன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.


அதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய்? அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு "எத்தனை மாசம்" மற்றும் "எப்போ பொம்பளையா மாறினே" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.


நானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா? அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...

இப்போதெல்லாம் அம்மாக்கு  சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.


எது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...


"இது மற்றுமொரு முத்தமில்லை"