Tuesday 29 November 2011

அன்ட்டைட்டில்ட்

ரொம்ப காலத்துக்கு எழுதாமல் விட்டுவிட்டு அப்புறம், சாரி, பிசி, அது இது என்று பீலா விடுவது என் வழக்கமாகிவிட்டது. மெய்யாலுமே பிசி'தாம்ப்பா, நம்புப்பா என்று நானும் ரவுடிதாம்பா என்று நாய் சேகர் போல் புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவரவர்க்கு ஆயிரம் வேலை, அதில் உன் பொழைப்பு ஒரு கேடு என்று சிரிக்கும் ஊர்.

9GAG என்று ஒரு தளம். பாழாய்ப்போன ஒரு தளம். கொஞ்ச நாள் அதில்தான் கிடந்து உருண்டேன். பேஸ்புக்கில் ப்ளேர்ட்டிங் பண்ணி மனம் நொந்து போவதை விட, எப்போதும் சிரித்து வாழலாம் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கித் தொலைத்திருக்கிறார்கள் அதை. நக்கல், நையாண்டி தவிர அனைத்தும் மறுக்கப்படும் அங்கே. கொஞ்சம் போய்ப் பார்க்கலாம். அப்புறம் உங்கள் வாழ்க்கையை நான் பாழாக்கிவிட்டேன் என்று புலம்புவதை தவிர்த்துக் கொள்ளவும்.

அப்புறம் 7ம் அறிவு பார்த்தேன். ஒவ்வொரு தனி உயிரினமும் தனக்கென தனியான ஜிநேட்டிக் மெமொரியை உருவாக்கிக் கொள்ளும் அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது என்ற தகவலை தியேட்டரில் வைத்து 'விக்கிப்பீடியா'வில் வாசித்து தொலைத்தேன். மற்றும், பார்த்த உடனேயே ஆணி புடுங்குகின்ற அளவுக்கு அனைவரும் செயல்படுகின்ற நோக்கு வார்மத்தை போதிதர்மர் கூட செய்து இருக்கமாட்டார். அந்த கண்டைனர் சண்டை தேவையே இல்லை. மற்றப்படி போதிதர்மர் பற்றி அறியக் கிடைத்ததுக்கு ஒரு தேங்க்ஸ். டாங் லீ'க்காக படத்தை இன்னுமொரு முறை பார்த்தேன். 'கனாக் கண்டேன்' இல் 'ப்ரிதிவிராஜ்' இற்கு அப்புறம் நான் ரசித்த ஒரு வித்தியாசமான வில்லன். 'என்னது, காந்தி செத்துட்டாரா?' என்கிற மாதிரி இப்போ இந்த விமர்சனம் தேவையா என்றும் மனசு ஒரு புறம் நச்சரிச்சது.

வழக்கம் போல வீட்டுக்கு ஒரு வேக்கேஷன் விசிட். கையில் காப்பி கப், வெளியில் மழை, திறந்த ஜன்னல், இதமான ஒரு காற்று, பழைய ஞாபகங்கள்... கொஞ்சம் கவிதை. கொஞ்சம் ஆடியோ டயரி. அப்றோம் அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றல் என்று கழிந்தது.

அந்தக்காலத்தில் புரட்சி நண்பர்கள் சேர்ந்தால் என்ன பண்ணுவார்கள்? சினிமாவில் வாருவது போல பாரதி கவிதையை உரக்கப் படித்து மழை விளிம்பில் நின்று சத்தம் போட்டு கையை உயர்த்திக் காட்டுதல்? இல்லாட்டி, கம்மியூனிசம் பத்தி புரியுற, புரியாத மாதிரி நாடகம் போடுறது, ஊர் மக்களை கூட்டி நரம்பு வெளியில் வருமாறு கத்தி பேசுறது?
நாங்கள் ஒரு கம்பனி ஆரம்பித்துத் தொலைத்தோம்.
போன வருஷம். உருப்பட்டதா? இல்லவே இல்லை. கிடப்பில் போடப்பட்டது. பிரெண்ட்ஷிப் பிரச்சனை அது இது'னு எல்லாரும் ஆளாளுக்கு ஒரு திசையில் சென்றார்கள். சரியாக ஒரு வருஷத்தின் பின் பழைய டீம் ஒன்று கூடியது. கிடப்பில் கிடந்த பைலை தூசு தட்டி எடுத்தார்கள். இப்போது, மன்னார் அண்ட் கம்பனி ரேஞ்சில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆல் ஒப் எ சடன், இருக்கும் அறையில் உள்ள சீலிங் பேன் சத்தம் போடத் தொடங்கியது. கிரீச்சிடும் அந்த சத்தத்தை ரெண்டு மூணு நாள் பொறுத்துக் கொண்டேன். எலெக்ட்ரீசியனை அழைத்து வர நேரமில்லாமல் ஆக்கி விட்டிருந்தது அந்தக் கிழமை முழுவதும் இருந்த எக்ஸாம். அப்புறம் சோம்பல் அதிகரித்து 'அப்பால பாக்கலாம்' என்று விட்டு விட்டேன். கொஞ்ச நாளில் அந்த சத்தம் இல்லாமல் தூங்க முடியவில்லை. சக நண்பர்கள் வேறு ரூமில் படுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு அந்த பேனை விட்டுப் பிரிய மனமே இல்லாமல் போனது. இதற்கு, அதிலிருந்து பெரிதாக காற்று ஒன்றும் வந்துவிடுவதுமில்லை. காலையில் எழும்பும் போது, 'அவதார்'இல் குறிஞ்சிப் பூ ஹீரோவின் உடம்பு முழுவதும் வந்து அமர்வது போல நுளம்புகள் என்னிலிருந்து பறந்து போவதாக நண்பர்கள் சொன்னார்கள். காலையில் எழும்பும் போறது பக்கத்தில் ஒரு சில நுளம்புகள் ரத்தம் கக்கி செத்துப் பொய் இருக்கும். மொஸ்கிட்டோ காயில்'ஓ, நுளம்பு வலையோ அல்லது ஒயிலோ நிம்மதியான தூக்கத்தை தர மறுத்தன. இரவில் அந்த சீலிங் பேனின் இதமான ராகமும், முகத்தில் படரும் நுளம்புகளும் இன்றி இனிமேலெல்லாம் நான் தூங்குவேனா என்றாகிப் போனது என் நிலைமை.

இந்தப் போஸ்ட் ஐ எழுதிவிட்டு ப்ரெண்ட் இடம் காட்டினேன்.

"இட் இஸ் எ ஷிட்" என்றான்.