Monday 2 August 2010

தூக்கம், ஜாக்கிங், தாத்தா மற்றும் அவள்

அதிகாலையில் குளிப்பது உடம்புக்கு நல்லது, அதுவும் கட்டிலில் குளிப்பது??? இந்தக் கொடுமை எல்லாம் எங்கள் வீட்டில்தான் நடக்கும். பொதுவாவே விடுமுறை என்றால் பத்து மணிக்கு அப்புறம் விடிவது சூரியனின் வாடிக்கை. அல்லது நமக்கு அப்பிடி நடக்கற மாதிரி பீஃலிங்க்ஸ் வரவேண்டும் என்பது கும்பகர்ணன் காலம் தொட்டு அவரது சீடப் பெருந்தகைகளால் (பாஃர் எக்ஸாம்பிள்: நான்) பின்பற்றப்படும் நடைமுறை. ஆனா எங்க பேஃமிலி ராம வம்சத்தை சேர்ந்தவர்கள் போலும். இந்த ஹாபிட் சுத்தமா பிடிக்காது. ஆகவே விடுமுறை நாட்களில் சாராயக்கடைக்குப் போவது போல பதுங்கிப் பதுங்கி இதை செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டேன். நான் எல்லாப் இந்த மாதிரி விஷயங்களில் இன்னுமே "பீட்டா" ஸ்டேஜய் தாண்டவில்லை என்பது வெளியிலே சொல்ல முடியாத ரொம்பக் கேவலமான ஒரு மேட்டர். பெரும்பாலும் மாட்டிகொண்டதே உண்டு. இதை கண்டுபிடிப்பதில் தாத்தா கை தேர்ந்தவர். பூட்டியிருக்கும் ஜன்னலை அசவுடன் (ஜன்னல் அசையுமாறு தாங்கி இருக்கும் தாங்கி) கழட்டிக் கொண்டு உள்ளே வந்தவர். இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தூங்குவதை விட காம சூத்திரத்தில் உள்ள அனைத்து போசிஷன்களையும் ஒரே நாளில் ட்ரை பண்ணிப் பார்த்துவிடலாம். இதில் மெகா கில்லாடி என் முதல் தம்பி. அவன் தூங்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா அவன் பேச்ச அவனே கேக்கறதுக்குக் கூட முழிச்சிட்டு இருக்கமாட்டான். ஒருமுறை அடுத்த நாள் நடைபெற இருக்கும் ஒரு கேம் ஷோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தூக்கம் வருதுன்னான். "கொஞ்சம் வெயிட் பண்ணுடா. இன்னும் டென் மினிட்ஸ்ல தூங்கலாம்" னு சொல்லிக் கொண்டிருந்தபோதே கழுத்தில் ஏதோ குத்துவதை உணர்ந்தேன். ஒரு நுளம்பு. அடித்துவிட்டுத் திரும்பியது அவன் குறட்டை விடாத குறை. இத்தனைக்கும் அப்போது இரவு எட்டு மணிதான்.

"நீ எத்தனை மணிக்குப் படுக்கறியோ அது மேட்டர் இல்லை, அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பறதுதான் மேட்டர்" என்பது தாத்தாவின் குவாட்டர் அடிக்காமல் சொன்ன தத்துவம். இத்தனை அலப்பறைக்கும் காரணம், அந்த பாழாப்போன "ஜாக்கிங்". தொந்தி குறைப்பதுக்கு டாக்டரிடம் அட்வைஸ் கேட்கப் போய் தலையில்வாரி இறைத்துக் கொண்ட மண் அது. ஆக்சுவலி இது என்னமோ தாத்தாக்குத்தான். நானே இதை தூக்கி என் பனியனுக்குள் போட்டுக்கொண்டதுக்கு காரணம் அவள். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் ஒடிந்து போய்க்கொண்டிருந்த எங்கள் கிளாஸ் இற்கு ரொம்ப நாளைக்கப்புறம் வந்த ரஜினி படம் மாதிரி வந்து இறங்கினாள் அந்த தேவதை. அவளை இம்ப்ரஸ் பண்ண எல்லாரும் ட்ரை பண்ண, சும்மா ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டிருந்த என்னையும் நடுத்த தெருவுக்கு இழுத்து வந்து வம்பிழுத்தது என் ஈகோ. ஒரு நண்பி மூலமாய் அந்த கேர்ள் தனக்கு வரவேண்டிய பாய்பிரண்ட் பத்தி என்ன ஐடியா வைத்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது கண்டிஷன், நோ தொந்தி.

இனி டாக்டர் அட்வைஸ் சீனுக்கு வருவோம்.டாக்டர் சொன்னபடியே தினம் தினம் ஜாக்கிங் போக முடிவெடுத்த என் தாத்தா வெளியே வரும் போறது, ஓர் உணர்ச்சி வேகத்தில் நானும் வரவான்னு கேட்டுத் தொலைத்தேன். தாத்தா பார்த்த பார்வை "ஏன்" என்ற கேள்விக் குறியாய் மாறி எனைத் தட்டியது. "இல்ல சும்மா, பாடிய மெயின்டெய்ன் பன்னலாமேன்னுதான்" என்றேன்.
"அப்போ கண்டிப்பா எல்லா நாளும் வந்துடனும்".
"ஓகே, எத்தனை மணிக்கு?"
"அஞ்சு"
"ஓகே தாத்தா, டன்"
"டன்"

அப்படித்தான் ஆரம்பித்தது இந்தக் கொலை வெறி பிடித்த சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம்.கொடுமையோ கொடுமை என்று ஒவ்வொரு நாளும் தொந்தி குறைக்க காலை அஞ்சு மணிக்கெல்லாம் பீச் சென்று நான் ஓடிக் கொண்டிருக்க, தன் காதலனுடன் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கொண்டு மேற்படிப்புக்காக வெளிநாடும் சென்று விட்டாள் அவள்.

அவள் டைரியில் என் பேரோ அல்லது அடையாளமாக என் சோடாபுட்டிக் கண்ணாடியோ குறிப்பிடப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவளுக்கு நான் யார் என்பதே தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் அவளுக்காக ஜாக்கிங் போன அந்தக் காலப் பகுதியில் என் டைரியில் ஒவ்வொரு நாளும் அவளுக்காக டெடிகேட் செய்தே ஆரம்பித்தேன். அது அழகிய காலப் பகுதி.
அது காதலில்லை. அவள் சென்றதுக்காக நான் வருத்தப் படவுமில்லை. இருந்தாலும் அவள் இப்போதிருக்கும் அட்ரஸ் தெரிந்தால்,"கொஞ்ச காலத்திற்கு என் உடம்பை மெயின்டைன் பண்ண ஹெல்ப் பண்ணியதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்" என்று ஒரு மொட்டைக்கடதாசி போடலாம் என்றிருக்கிறேன் :)