Sunday, 26 December 2010

மன்மதன் அம்பு

எனக்கு புரியல. ஏன் எல்லாரும் மன்மதன் அம்பு'வ இந்த காட்டு காட்டறாங்க. கப்பல்ல ஒரு படம் எடுக்கிராங்கன்னா அதுக்காக கப்பலை மையமா வச்சுதான் கதை இருக்கணுமா என்ன. 'வ குவாட்டர் கட்டிங்'ல ஒருத்தர் கேப்பாரே "ஏன்யா எல்லாத்துக்கும் மெஸ்ஸேஜ் தேடிட்டு அலையுறீங்க" அப்படின்னு, அந்த மாதிரி இருக்கு. கமல் ஒரு திறமையான நடிகர். அதுக்காக அவரு பண்ற எல்லாப் படமுமே "ஆர்ட் பிலிம்" மாதிரித்தான் இருக்கணும்னா, பாவம் வயித்துப் பிழைப்புக்கு எங்க போவாரு. நான் அவரது தீவிர ரசிகன். எனக்கு என்னமோ தெரியல கமல் எது பண்ணாலும் பிடிக்குது. படங்கள சொன்னேன். ஏன் கமல் படம்னா "ஆ ஊ"னு ஒரு கூட்டம் கிளம்பிடுதோ தெரியல. எதுக்கெடுத்தாலும் பிரச்சினை. எதைப் பேசினாலும் பிரச்சினை. யார் கண்டது, மன்மதன் அம்பு'ல ஒரு டயலாக் வரும், "தமிழ விடுங்க, அது இனி மெல்லச் சாகும், நாம சாகாம இருந்த சரிதான்"னு சொல்லுற மாதிரி, இதுக்கும் ஏதும் அட்டாக் வாரல்லாம். அப்புறம் ஈழத் தமிழர் கேரக்டர் அவமதிக்கிற மாதிரி இருக்குனு சொல்றாங்க. இதை ஒரு இந்திய தமிழர் அல்லது வடிவேலு செஞ்சிருந்தா விழுது விழுந்து சிரிச்சிருப்போம்ல. இதான்யா நம்ம ப்ராப்ளமே. நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்க வேண்டிய விஷயங்கள சீரியஸ் ஆக பார்க்கிறோம்.

படம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் மற்றும் ஒரு க்ரூஸ் கப்பலில். இதுலயும் ஒரு பிரச்சனை. எதுக்காக அவரு அங்க போய் படம் எடுக்கணும். எதுக்காக செலவளிக்கணும். என்ன ப்ராப்ளம்பா இது. கதையின் படி, த்ரிஷா ஒரு நடிகை. சங்கீதா அவங்க ஸ்கூல் ப்ரெண்ட். கவலையை மறக்க த்ரிஷா கொஞ்ச நாள் அவங்க கூட இருந்துட்டு வரலாம்னு அங்க போறாங்க. இந்த ட்ரிப் பத்தி சந்தேகப்படுற அவங்க 'வுட் பீ' மாதவன் அவங்களை கண்காணிக்க மேஜர் கமலை செட செய்து அனுப்புகிறார். ஸோ கமலும் யூரோப் போறாரு. இது யார் குற்றம், அங்க வாழுற சங்கீதா குற்றமா. அல்லது, பார்க்கப் போன த்ரிஷா குற்றமா. அல்லது, கமலை அனுப்பின மாதவன் குற்றமா. அல்லது இப்பிடி கதை எழுதின கமல் குற்றமா. அல்லது இதை ஏற்றுக் கொண்ட ப்ரோடியூசர் குற்றமா. அங்க லொக்கேஷன் செலக்ட் பண்ணின கேமரா மேன் மற்றும் டைரக்டர் குற்றமா? எல்லாத்துக்கும் மேல அனாவசிய செலவு பத்தி ஏன் கமல் படத்த மட்டும் பேசறீங்க. எந்திரனும் சேம் ட்ராக். ஒரு சாங்குக்காக வேண்டி உலகமே போகாத ஒரு இடத்துக்கு நாள் கணக்குல ட்ராவல் பண்ணி எதுக்கு போகணும்? :/

ஓகே, இத விடுவோம். லெட்ஸ் கம் டு தி பாயின்ட். படம் பார்த்தேன். கமலின் அல்ட்ரா யூனிக் காமெடி படங்களில் ஒன்று. வடிவேலுவின் அடி வாங்கும் படலம் மட்டும் ரசிக்கும் கண்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. வார்த்தைகளை மட்டும் வைத்து வரும் காமெடி காட்சிகள் ஏராளம். த்ரிஷாவை விட சங்கீதா கூடுதல் அழகு. மாதவன் ஸ்கோர் பண்ணுகிறார். கமல் தன்னை முன்னிலை படுத்தாமல் மற்றவர்களுக்கு இடம் கொடுத்திருப்பது பெருந்தன்மை. மற்றும், கமல் பாடுவதை தவிர்த்திருக்கலாம். நீல வானம் பாடலில், ரிவர்ஸ் ப்ரேமிங் எனப்படும் யுக்தி அருமை. குடுமபத்துடன் போய் பார்க்கலாம்.

கதை, ரெண்டாவது பந்தியில் சொன்னது. மேலும் நண்பனின் கேன்சரை குணப்படுத்தும் செலவுக்காக செக்கியூரிட்டி ஏஜென்சி வைத்திருக்கும் கமல் இந்த வேலையை மாதவனிடத்தில் ஏற்றுக் கொள்கிறார், பின் தொடர்கிறார். த்ரிஷாவை பற்றி அவங்க நல்லவங்க என்று ஒரு கமல் கட்டத்தில் கமல் செர்டிபிகேட் கொடுக்க, அவரை உடனே திரும்பி வந்துவிடும்படி சொல்கிறார் மாதவன். அதே சமயம் பேசிய பணத்தை கமலுக்கு குடுக்கவும் மறுக்கிறார். காரணம், கமல் த்ரிஷாவை பற்றி மோசமான தகவல் எதையும் துப்பறியவில்லை என்பது. கமலுக்கும் அவசர பணத்தேவை இருப்பதால், த்ரிஷாவைப் பற்றி மோசமாகத் தகவல் குடுத்து மாதவனிடத்தில் காசை வாங்கிக் கொள்கிறார். இந்த நாடகங்கள் எப்படி முடிவுக்கு வந்தன என்பது இரண்டாவது பாதி.

படத்தைப் பார்த்து விட்டு நண்பன் ஒருவன் பேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ், "கமல் பிகர மாதவன் தூக்கிட்டுப் போனா அது 'அன்பே சிவம்'. மாதவன் பிகர கமல் தூக்கிட்டுப் போனா அது 'மன்மதன் அம்பு".

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போன எனற்கு, ஒரு அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி.



Saturday, 25 December 2010

வளவளத்தாரின் கடை

ஊரின் ஒதுக்குப்புறத்திற்கும் மையத்திற்கும் ஒரு நேர்கோடு வரைந்து அதன் மையத்தை தெரிவு செய்தால் எங்கே வருமே அவ்வாறான ஒரு இடத்தில் அமைந்திருக்கும் வளவளத்தாரின் கடை. ஒரு மிகச் சாதாரண 'டீ' கடை. பக்கத்தில் ஊரில் இருந்த ஒரே ஒரு ஆலமரம் நிழல் தரும். அதில் தனது கடை பெஞ்சுகளை போட்டு வைத்திருப்பார். காலையில் முதல் வேலையாய் காக்காய்களுக்கு வடைத்துண்டு போடுவதாலோ என்னவோ பெஞ்சுகளில் காகங்களின் எச்சம் காணப்படுவதில்லை. காலை அஞ்சு மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். பள்ளிகளில் தொழுது முடிந்து அங்கே ஒரு டீயுடன் அப்பம் சாப்பிடுவது அனைவரினதும் அன்றாடக் கடமை போலாகியது. அப்பாவுடன் போய் அங்கே ஒரு டீ குடித்துவிட்டு கடற்கரை போய் காலை நனைத்து விட்டு வீடு வருவது என் பால்ய வயதுப் பழக்கம்.

பொடிசுகள் எல்லாரும் மகன், மகள். என் அப்பா வயதுடைய எல்லோரும் தம்பி. அதற்கு மேற்பட்டவர்கள் நானாமார் என வளவளத்தாரிற்கு எக்கச்சக்க உறவினர். வளவளத்தாரின் பெயர்க்காரணம் கேட்டால் அவரே சொல்வார், "ஒண்டுமில்ல மன, நமக்கு சின்ன வயசில இருந்தே கொஞ்சம் கூடுதலா கேள்வி கேக்குற பழக்கம். எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து கேள்வி கேட்டு கேட்டு கொஞ்சம் கூடுதலா பேசத் தொடங்கிட்டன் போல." தன்னை மற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பட்டப் பெயர் கொண்டு கேலி செய்வது தெரிந்திருந்தும் மனசுக்குள் வைத்திருந்ததில்லை. தன்னை யாரும் பேசி விஞ்ச முடியாது என்று சொல்லிக்கொள்வார். "இதுவும் ஒரு பெரும தானே மன."

இத்தனைக்கும் அவரின் "டீ" ஊற்றும் கைப் பக்குவம் ஊரில் வேறு யாரிடமும் இருந்ததில்லை. அரசியல் பற்றி அவர் அளவளாவும் திறமையை பார்த்து "ஏன் இவர் அரசியல்வாதி ஆகவில்லை" என்று அப்பாவிடம் கேட்டிருக்கின்றேன். "அரசியல்ல இருக்கும் எல்லாரும் திறமையான, அரசியல் பற்றி நன்றாக தெரிஞ்சவங்கதானா?" என்று என்னிடம் பதில் கேட்டார் அப்பா. ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை புது வாழைப்பழக் குலை தொங்கும் கடையின் முன் பக்கத்தில். சிகரட் விற்றதில்லை. கடன் அன்பை முறிக்கும் என்ற போர்ட் இருந்ததில்லை. "பேங்க்ல இருக்குறத விடவும் என்ட கடைலதான் மன கூட அக்கவுன்ட் இருக்கு." இருந்தும் யாரும் அவரை ஏமாற்றியது கிடையாது. வாரம் ஒரு முறை கணக்கு செட்டில் செய்துவிடுவார்கள். சில பேருக்கு இலவச டீயும் கொடுப்பார். "ஒரு நாளைக்கு ஒரு வேள சாப்பாட்டுக்கே கஷ்டப்படுதுகள், காலைல முதல் வேளையாவது சந்தோஷமா சாப்பிடட்டுமே மன."

வளவளத்தார் என்ற பெயர் அவருக்கு கொஞ்சம் கூட சரியில்லை, மற்றவர்கள் அப்படிக் கூப்பிடுவது அவரை அவமதிக்கிற மாதிரி இருக்குப்பா, என்று சொல்லி இருக்கேன். அப்பாவும் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால், அதுதான் அவரின் அடையாளம். வளவளத்தார் என்றால் ஊர் முழுக்க தெரிந்திருந்தது. தான் வாசிக்கும் ஒற்றைப் பாதையைத் தவிர வேறு எதையும் தெரிந்திராத 'சகீனா' கிழவிக்கு கூட அவரது கடை தெரிந்திருந்தது. தனது பேரனை முதல் தடவையாக ஒரு பொருள் வாங்க வெளியே அனுப்பும் போது "அந்த மெயின் ரோட்டுல இருந்து மூணாவது சந்தில கிழக்குப் பக்கமா போற ரோட்டுல போனா ஒரு ஆல மரம் வரும். அதுக்கு பக்கத்துலதான் நம்மட வளவளத்தார்ட கட இருக்கு. அங்க போயி ஒரு நாலு அப்பம் வாங்கி வாடா" என்று சொல்லி அனுப்புவாள். இந்த "நம்மட" என்ற சொல் மூலம் அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கத்தவர் ஆனார் வளவளத்தார்.

அனைவரின் வீட்டுத் திருமணங்களிலும் அவரைக் காணலாம். இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வார். காசு பணம் எதிர்பார்ப்பதில்லை. "இதெல்லாம் மனத் திருப்திக்கு மன. என்ட பொண்டாட்டி உசுரோட இருந்து எனக்கும் புள்ள குட்டி இருந்திருந்தா நீங்க எல்லாம் வந்து உதவி செய்ய மாட்டிங்களா. அல்ப்பாய்சுல அவா செத்துப் போவா எண்டு எனக்கு முன்னாடியே தெரியலையே. அத விடு மன. உண்ட கல்யாணத்துக்கும் முதல் 'இன்டேசன்' எனக்குத்தான் சரியா?." 'இன்விடேஷன்' என்பதை சரியாக சொல்லுமளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்றாலும் அவருக்கும் ஒரு சில வெள்ளைக்கார நண்பர்கள் இருந்தார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்களுக்கு இவரின் டீ பிடித்துப் போக, இவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். கொஞ்ச நாளையில், இங்கிலாந்திலிருந்து அந்த போட்டோவும் ஒரு வாட்சும் அவரது கடைக்கு வந்தது. "வெள்ளைக்காரன், வெள்ளக்காரன்தான் மன. சொல்லி வேல இல்ல" என்றார்.

சிறிது நாளையில் மேற்படிப்புக்காக வெளியூர் வந்துவிட்டேன். செமஸ்டர் இறுதிப் பரீட்சை நடந்து கொண்டிருந்த சமயம், தொலைபேசியில் அம்மா சொன்னாள், அவர் மாலை இறந்துவிட்டதாக. சாதாரணமாக தூங்கும்போதே இறந்திருந்ததாக. அவரை அடக்குவதற்காக ஊரே கூடியிருந்ததாக தம்பி சொன்னான். இது எதிர்பார்த்ததே என எண்ணிக்கொண்டேன்.

ஊர் போயிருந்த நேரம், அவர் கடைக்கு சென்று பார்த்தேன். கடைக்கு கதவு இருக்கவில்லை. உள்ளே, ஒரு சிலர் படுத்திருந்தனர். அதே சமயம் அவ்வழியால் வந்த மாமா சொன்னார், "அவரு உயில்ல இப்பிடித்தான் எழுதி இருந்தாராம். கஷ்டப்படுற ஆக்களுக்கு கொஞ்ச நாளைக்கு கடை கதவை திறந்து வைங்க எண்டு"

வளவளத்தார் ஒரு உயர்ந்தவர்தான் என சொல்லிக் கொண்டேன்.